பின்பற்றுபவர்கள்

புதன், 5 ஆகஸ்ட், 2015

ஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியமான சன்னியாசி



ஸ்ரீகிருஷ்ணர் மிகவும் ஆச்சரியமான சன்னியாசி. அதே வேளையில் மிக ஆச்சரியமான இல்லறவாசி. அவரிடம் ஆச்சரியகரமான ரஜஸ் அதாவது அதிகாரம் இருந்தது. அதே நேரத்தில் மிக ஆச்சரியமான துறவு உணர்வுகளுக்கு இடையே அவர் வாழ்ந்தார். கீதையைப் படிக்காமல் கிருஷ்ணரைப் புரிந்துகொள்ள முடியாது. தமது போதனையின் திரண்ட வடிவம் அவர். தாங்கள் பிரச்சாரம் செய்ய வந்த உண்மையின் நடைமுறை விளக்கங்களாகவே ஒவ்வொரு அவதார புருஷர்களும் வாழ்ந்தார்கள். பகவத் கீதையைப் போதித்தவரான ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்வு அந்த தெய்வீக கவிதையான கீதையின் விளக்கமாகவே திகழ்ந்தது. பற்றின்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் விளங்கினார். தமது மணிமுடியைத் துறந்து விடுகிறார். பின்னர் அதைப்பற்றி அவர் கவலைப்படவே இல்லை. இந்தியாவின் தலைவர் அவர், அவரது ஆணையில் மன்னர்கள் முடி துறந்தார்கள். ஆனால் தாம் மன்னராக ஒருபோதும் விரும்பவில்லை. கோபியருடன் ஆடிக்களித்த எளிய கிருஷ்ணராகவே எப்பொழுதும் இருந்தார் அவர்.
https://web.archive.org/web/20130809185427im_/http:/3.bp.blogspot.com/-pMYQnmBRXJA/UKPKk64VMdI/AAAAAAAAAas/F330llOwrAA/s1600/krishnan..jpeg

                  
ஆகா அவரது வாழ்க்கையின் அந்த அற்புதப் பகுதியான ராசலீலை  -  அதைப் புரிந்து கொள்வதுதான் எவ்வளவு கடினமானது. முழுக்க முழுக்க தூய்மையும் ஒழுக்கமும் இல்லாத யாரும் அதைப்புரிந்து கொள்ள முயற்சிக்கவே கூடாது. அற்புதக் காதலின் ஆனந்தப் புரிப்பே அந்த பிருந்தாவன லீலையின் உருவகமாக விளக்கப்பட்டுள்ளது. அன்பினால் பித்தேறி அன்பெனும் மதுவை அருந்தி அன்புப் பித்தேறியவர்களைத் தவிர யாரும் அதைப் புரிந்துகொள்ள முடியாது. கோபியரின் அன்புதான் எத்துணை மகத்தானது. அது அன்பின் மொத்த வடிவம். வேறு எதையும் விரும்பாதது. சொர்க்கத்தைப் பற்றிக்கூட கவலைப்படாதது. இவ்வலுகில் மட்டுமல்ல மறு உலகிலும் எதையும் நாடாதது. அந்த அன்பின் தாபங்களை யார்தாம் புரிந்துகொள்ள முடியும்?

             
என் நண்பர்களே. இங்கே, இந்த கோபியரின் அன்பில்தான் உருவக்கடவுள் - அருவக்கடவுள் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது. மனிதனால் ஏற்க முடிந்த மிக உயர்ந்த மிக உயர்ந்த லட்சியம் உருவக்கடவுள் என்பது நமக்குத் தெரியும். பிரபஞ்சம் எங்கும் நிறைந்தும், தனது வெளிப்பாடாகவே இந்தப் பிரபஞ்சத்தைக் கொண்டும் விளங்குகின்ற அருவக்கடவுளில் நம்பிக்கை கொள்வது தத்துவமயமானது என்பதை நாம் அறிவோம். நம்மால் பார்க்கக்கூடிய , நம்மால் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு வடிவத்தை, இதய தாபங்களை எல்லாம் பாதங்களில் கொட்டி ஆறுதல் பெற்றிட ஒரு உருவத்தை நம் மனம் நாடுகிறது. எனவெ மனிதனால் சிந்தனை செய்ய முடிந்த மிக உயர்ந்த கருத்து உருவக்கடவுள். ஆனால் அறிவோ இத்தகைய கருத்தைக் கண்டு திகிலடைந்து நிற்கிறது.
https://web.archive.org/web/20130809185427im_/http:/3.bp.blogspot.com/-3lRsJhQDIJk/UKPKvv4ykzI/AAAAAAAAAa0/iS2CMl1Yzj4/s1600/krishnan.3.jpeg

               
இந்தப் பிரச்னை ஒன்றும் புதிதல்ல. பிரம்ம சுத்திரத்திலோ காட்டில் திரௌபதி தர்மபுத்திரருடன் விவாதித்தபோதும் எழுப்பப்பட்ட அதே பழைய  கேள்விதான். கருணையே வடிவான , எல்லாம் வல்ல சகுணக் கடவுள் ஒருவர் இருந்தால், இந்த புமி ஏன் நரகமாக உள்ளது? அவர் ஏன் இப்படி ஒன்றைப் படைக்க வேண்டும்? அந்தக் கடவுள் ஒருதலைப் பட்சமானவரே. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் இருப்பதாக தெரியவில்லை. இருக்கின்ற ஒரே பதிலை கோபியர் கொண்ட அன்பில்தான் காண முடியும். அவர்கள் கிருஷ்ணரைப் பற்றிய புகழ்மொழ்கள் அனைத்தையும் வெறுத்தார்கள். அவர் படைப்பின் தலைவனான இறைவனா? என்பதை அறிய அவர்கள் விரும்பவில்லை. அவர் எல்லாம் வல்லவரா, எல்லா ஆற்றல்களும் நிறைந்தனவரா என்பன போன்ற எதையும் அறிந்து கொள்ள விரும்ப வில்லை. கிருஷ்ணன் என்றால் எல்லையற்ற அன்பு. இது ஒன்றை மட்டுமே அவர்கள் புரிந்துகொண்டிருந்தன, அவ்வளவுதான். பிருந்தாவன கிருஷ்ணனை மட்டுமே அவர்கள் அறிந்திருந்தார்கள். இடையர்குல தலைவனாகவும் மன்னாதி மன்னனாகவும் விளங்கிய கண்ணன் அந்தக் கோபியரைப் பொறுத்தவரை மாடு மேய்ப்பவர் . என்றென்றைக்கும் மாடு மேய்ப்பவர் மட்டுமே. எனக்கு செல்வம் வேண்டாம், மக்கள் வேண்டாம், கல்வியும் வேண்டாம், சொர்க்கத்திற்குக் கூட நான் போக வேண்டாம். நான் மறுபடி மறுபடி பிறப்பேனாக. ஆனால் என் இறைவா அந்தப் பிறவியில் எல்லாம் நான் உன்னை அன்பு செய்ய வேண்டும், அன்பிற்காகவே அன்புகொள்ள வேண்டும். இந்த வரத்தை எனக்கு அருள்வாயாக.மத வரலாறில் ஒரு மைல் கல்லை இங்கு நாம் காண முடிகிறது. அன்பிற்காக அன்பு, பணிக்காக பணி, கடமைக்காக கடமை போன்ற லட்சியங்களை இங்கு நாம் காண்கிறோம். மனித சமுதாய வரலாற்றிலேயே முதன்முறையாக, அவதாரங்களுள் தலைசிறந்தவராகிய கிருஷ்ணரின் திருவாயினின்று இந்த லட்சியம் உதிர்ந்துள்ளது. பயமுறுத்துவதும் ஆசை காட்டுவதுமாக இருந்த மதங்கள் எல்லாம் அடியோடு ஒழிந்துபோய்விட்டன. நரகத்தைப் பற்றிய பயம், சொர்க்கத்தின் இன்பங்களை அனுபவிக்கும் ஆசை போன்றவற்றின் இடத்தில் அன்பிற்காக அன்பு, கடமைக்காக கடமை, பணிக்காக பணி போன்ற மகத்தான லட்சியங்கள் தோன்றின.
https://web.archive.org/web/20130809185427im_/http:/2.bp.blogspot.com/-rIBQvnJsOM4/UKPK4g_HcII/AAAAAAAAAa8/u0kwSC3ARPI/s1600/krishnan.1.jpeg

  
எத்தகைய அன்பு அது! கோபியரின் அன்பைப் புரிந்து கொள்வது கடினம் என்று சற்று நேரத்திற்கு முன்பு சொன்னேன். கண்ணனின் வரலாற்றிலேயே ஈடிணையற்ற பகுதியான இந்த ராசலீலையின் உட்பொருளைப் புரிந்து கொள்ள முடியாத மூடர்கள் நம்மிடமும் இல்லாமல் இல்லை. ஏதோ அசுத்தத்தை தவிர்ப்பது போல் இதிலிருந்து விலகியோட முயற்சிக்கின்ற , நம் ரத்தத்தில் பிறந்தும் தூய்மையற்றவர்களாக அத்தகைய முட்டாள்கள் இருக்கவே செய்கின்றனர் என்பதை மீண்டும் சொல்ல என்னை அனுமதியுங்கள். அவர்களுக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகின்றேன். முதலில் நீங்கள் தூய்மை பெறுங்கள், கோபியரின் பிரேமை வரலாற்றை சொல்லியவர் வேறு யாருமல்ல, சுகதேவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கோபியரின் இந்த அற்புத பிரேமையை எழுத்தில் வடித்த சுகதேவர் பிறப்பிலிருந்தே தூய்மையானவர், என்றென்றுமே தூயவர், வியாசரின் மகன்.

                    
மனதில் சுயநலம் இருக்கும் வரை கடவுளின் அன்பு தோன்றுவது சாத்தியமல்ல. சுயநல அன்பு வெறும் வியாபாரமே தவிர வேறல்ல. பகவானே நான் உனக்கு சிலவற்றை தருகிறேன்அதற்கு பதிலாக நீ சிலவற்றைக் கொடுஎன்கிறார்கள் இவர்கள். உடனே பகவான் நீ இன்னதை செய்யாமல் இருந்தால் உன்னை  நான் உன் மரணத்திற்கு பின்னர் கவனித்துக்கொள்கின்றேன்என்பார். அல்லது ஒருவேளை வரும் பிறவிகள் தோறும் உன்னை நெருப்பில் வருத்தி எடுப்பேன்என்பார். இப்படிப் போகிறது அவர்களின் அன்பு. இத்தகைய தாழ்வு எண்ணங்கள் மூளையில் இருக்கும்வரை கோபியரின் அன்புப் பித்தினைப் பிரேம தாபங்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? , ஒரு முத்தம் அந்த இதழ்களிலிருந்து ஒரே ஒரு முத்தம். நீ ஒருவனை முத்தமிட்டுவிட்டால் உன் மீது அவனது தாகம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அவனது துன்பம் எல்லாம் தொலைந்து போகிறது. உன்னைத் தவிர மற்றவரின் மீதுள்ள பற்றினை அவன் மறக்கிறான். உன்னை , உன்னை மட்டுமே நினைக்கிறான்.
https://web.archive.org/web/20130809185427im_/http:/2.bp.blogspot.com/-m1ykEHhOH_4/UKPLLQuDRfI/AAAAAAAAAbM/dwgVrJJcR-A/s1600/krishnan.2.jpeg

              
பணம், பெயர், புகழ் இவற்றின் மீதும், பயனற்ற இந்த உலகின் மீதும் உள்ள ஆசைகளை விட்டுவிடுங்கள். அதன் பிறகு, அதன் பிறகு மட்டுமே கோபியரின் அன்பை உங்களால் புரிந்து கொள்ள முடியும். எல்லாவற்றையும் துறக்காமல் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அந்த அன்பு புனிதமானது. மனம் அப்பழுக்கற்ற தூய்மை அடையாமல்  அந்தப் புனிதமான அன்பைப் புரிந்துகொள்ள முடியாது. இதயத்தில் காமமும் பணத்தாசையும் புகழ் போதையும் ஒவ்வொரு நிமிடமும் பொங்கி குமுறுகின்றவர்கள், கோபியரின்அன்பைப் புரிந்து கொள்ளவும் அதைக் குறைகூறவும் துணிகிறார்கள். கிருஷ்ண அவதாரத்தின் சாரமே கோபியரின்அன்புதான். மகத்தான தத்துவமான கீதையைக்கூட கோபியரின் இந்த பிரேமை வெறியோடு ஒப்பிட முடியாது. ஏனெனில் லட்சியத்தை நோக்கி ஒருவர் நிதானமாக செல்வது பற்றியே கீதையில் போதிக்கப்படுகிறது. ஆனால் இங்கோ இந்த ஆனந்த வெறியில் அன்பு போதையில், சீடர்கள், ஆச்சாரியர்கள் , போதனைகள், புத்தகங்கள் எல்லாமே, ஏன், அச்சம், கடவுள், சொர்க்கம் போன்ற கருத்துக்கள் கூட ஒன்றாகி விடுகின்றன. எல்லாமே வீசி எறியப்பட்டு விடுகின்றன, எஞ்சுவது அன்புப் பித்து ஒன்றே. எல்லாவற்றையும் மறக்கின்ற நிலை இது. இந்த அன்புப் பித்தில் ஆழ்கின்ற அன்பன் கிருஷ்ணனைத் தவிர இந்த உலகில் வேறு எதையும் காண்பதில்லை. அவரை, அவரை மட்டுமே காண்கிறான். ஒவ்வொரு முகமும் அவனுக்குக் கிருஷ்ணனின் முகமாகத் தெரிகிறது. அவனது சொந்த முகமே கிருஷ்ணனின் முகம் போல் தெரிகிறது. அவனது ஆன்மா கூட கிருஷ்ண வண்ணத்தில் தோய்ந்து விடுகிறது. அது, அதுதான் மகத்தான கிருஷ்ணனர்!. 

             வீண் விபரங்களை அறிந்து கொள்வதில் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கையின் அடிப்படையை, அதன் சாரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். கிருஷ்ணனின் வாழ்க்கையில் வரலாற்றிற்கு முரணானவை பல இருக்கலாம், இடைச்செருகல்கள் இருக்கலாம். இவை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் பரம்பரைப் பாதையிலிருந்து விலகிச் செல்கிற இந்தப் புதிய மகத்தான கருத்துக்களுக்கு ஒரு அடிப்படை, ஒரு அடித்தளம் இருந்தே ஆக வேண்டும். வேறு எந்த ரிஷி அல்லது மகானின் வாழ்க்கையை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். அவர் தமக்கு முன்பிருந்த  கருத்துக்களின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருக்கிறார். அல்லது தமது காலத்திலே, தமது நாட்டிலேயே பரவலாக காணப்படுகின்ற கருத்துக்களை மட்டுமே போதிக்கிறார். இந்த மகான் இருந்தாரா இல்லையா என்ற சந்தேகம் கூட தோன்றலாம்!. ஆனால் நான் சவால் விடுகிறேன், இந்த லட்சியங்கள் - பணிக்காகவே பணி, அன்பிற்காகவே அன்பு, கடமைக்காகவே கடமை - இவை கிருஷ்ணரின் சொந்தக் கருத்துக்கள் அல்ல, இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்திய வேறொருவர் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம். முடியாது. இந்தக் கருத்துக்கள் வேறு யாரிடமிருந்தும் கடனாக வாங்கப்பட்டிருக்க முடியாது. கிருஷ்ணர் பிறந்தபோது அவை காற்றிலே மிதந்து கொண்டிருக்கவில்லை. கிருஷ்ண பகவான்தான் முதன் முதலில் அதை வெளிப்படுத்தியவர், அவரது சீடரான வியாசர் அதை மனித குலம் முழுவதிற்கும் பிரச்சாரம் செய்தார். இது மிக உயர்ந்த கருத்து.


              கிருஷ்ணரின் பரிமாணங்களுள் நாம் பெறக்கூடிய மிக உயர்ந்த பரிமாணம் கோபிஜன வல்லபர், பிருந்தாவன கோபியரின் காதலன். அந்த அன்புப் பித்து உங்கள் மூளையில் புகுமானால், ஆசீர்வதிக்கப்பட்ட அந்த கோபியரை நீங்கள் புரிந்து கொள்ள முடியுமானால், அப்போதுதான் அன்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். உலகமே மறந்து போய் மற்ற எல்லா எதிர்பார்ப்புகளும் ஒழிந்து போய், வேறொரு நோக்கமும், உண்மையைத் தேடும் ஆசை கூட இல்லாமல் உங்கள் இதயம் தூய்மை அடைய வேண்டும். அப்போது, அப்போது மட்டுமே அந்தப் பிரேமை வெறி உங்களுக்கு வரும். கோபியர் கொண்டிருந்த எல்லையற்ற அந்த அன்பின் சக்தியும் பலமும் உங்களுக்கு வரும். அன்பிற்காகவே அன்பு செய்ய உங்களால் முடியும். அதுதான் லட்சியம். அதைப் பெற்றால் நீங்கள் எல்லாவற்றையும் பெற்றுவிட்டீர்கள்.


              இந்த உயர்நிலையிலிருந்து சற்று கீழ் நிலைக்கு அதாவது கீதையை உபதேசித்த கிருஷ்ணரிடம் வருவோம். குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போன்ற தொரு முயற்சி இப்போது இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. கிருஷ்ணர் கோபியரின் காதலனாக இருப்பது நம்முள் பலருக்கு ஏதோ அமானுஷ்யமாக தோன்றுகிறது, இத்தகைய விஷயங்களை ஐரோப்பியர்கள்  அதிகமாக விரும்புவதில்லை. டாக்டர் இன்னார் அதை விரும்பவில்லை என்றால் கோபியர் போயே தீரவேண்டும்!. ஐரோப்பியனின் அனுமதி இல்லாமல் எப்படி கிருஷ்ணர் வாழ முடியும்? வாழ முடியாது. மகாபாரதத்தில் கோபியரைப் பற்றி ஏதோ முக்கியமில்லாத ஓரிரு இடங்களில் தவிர எங்குமே குறிப்பிடப்படவில்லை. திரௌபதியின் பிரார்த்தனையிலும் சிசுபாலனின் பேச்சிலும் பிருந்தாவனத்தைப் பற்றிக் கூறப்படுகிறது. அவ்வளவுதான். இவை எல்லாம் இடைச்செருகல் ஆகத்தான் இருக்க வேண்டும்!. ஐரோப்பியர்களுக்கு எது தேவை இல்லையோ அதை உடனே தூக்கி எறியத்தானே வேண்டும்!. கோபியரைப்பற்றி, ஏன், கிருஷ்ணர் கூட இடைச்செருகல் தான்!. என்னவென்று சொல்வது!. கொடுக்கல்- வாங்கலில் ஆழ்ந்து மூழ்கிய இவர்களைப் பொறுத்தவரை மதம் கூட வியாபாரமாகி விடுகிறது. இங்கே எப்படியாவது, ஏதாவது செய்து சொர்க்கத்திற்கு போக முயற்சிக்கிறார்கள். இங்கு ஒன்றைக் கொடுத்து அங்கே கூட்டுவட்டியுடன் இன்பம் அனுபவிக்கத் துடிக்கும் வியாபாரிகள் அவர்கள். இத்தகைய ஒரு சிந்தனை முயற்சியில் நிச்சயமாக கோபியருக்கு இடமில்லைதான். 


                லட்சியக் காதலனான கிருஷ்ணனிலிருந்து, சற்று கீழ் நிலையான கீதை போதகரான கிருஷ்ணரிடம் வருவோம். கீதையை விட ஒரு சிறந்த உரை வேதங்களுக்கு இதுவரை எழுதப்படவுமில்லை. இனி எழுதவும் முடியாது. வேதங்கள் ஆகட்டும், உபநிடதங்கள் ஆகட்டும், அவற்றின் உட்பொருளைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில் ஒவ்வொரு உரையாசிரியர்களும் தத்தம் போக்கில் பொருள்கூற முற்படுகின்றனர். எனவே பகவானே வந்தார். வேதங்கள் வெளிப்பட காரணமாக இருந்த அவரே அவற்றின் சரியான பொருளை நமக்குத் தெரிவிப்பதற்காக கீதோபதேசராக வந்தார். கீதையை விட சிறந்த ஒன்று இன்றைய இந்தியாவிற்கு தேவைப்படவில்லை. கீதை தரும் விளக்கங்களை விட சிறந்த எதுவும் உலகிற்கு தேவைப்படவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த உரையாசிரியர்களால் பல இடங்களில் அதன் சரியான பொருளை உணர்ந்து கொள்ள முடியவில்லை. பல இடங்களில் அதன் போக்கை புரிந்து கொள்ள இயலவில்லை.


               அப்படியானாலும் கீதையில் நீங்கள் காண்பது என்ன? இன்றைய உரையாசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ஓர் அத்வைத உரையாசிரியர் உபநிடதம் ஒன்றை எடுக்கிறார். அதில் துவைதப் பகுதிகள் எத்தனையோ வருகிறது. அதை அவர் உடனே திரித்து , சிதைத்து ஏதோ ஒரு பொருளைக் கூறி , எல்லாவற்றையுமே தமது கோட்பாட்டிற்கு ஏற்ப மாற்ற முயற்சி செய்கிறார். துவைத உரையாசிரியரும் அப்படித்தான். அவர் அதில் உள்ள அத்வைதப் பகுதிகளை சிதைத்து மாற்றி துவைதத்தின் கீழ் கொண்டுவந்து விடுகிறார். ஆனால் கீதையில் இத்தகைய முயற்சிகள் எதுமே இல்லை. எல்லாமே சரியானவைதான் என்கிறார் பகவான். ஏனெனில் ஆன்மா தூலத்திலிருந்து நுண்நிலைக்கு, பின்னர் நுண் நிலையிலிருந்து அதி நுண் நிலைக்கு மெல்ல மெல்ல, படிப்படியாக மேலே சென்று கடைசியில் தன் லட்சியமான பிரம்மத்தை அடைகிறது. இதுவே கீதையில் கூறப்பட்டுள்ளது. 


           கீதையில் கர்ம காண்டம் பகுதி கூட எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அவை நேராக அன்றி மறைமுகமாக மட்டுமே முக்தியைத் தர முடியும், என்றாலும் அவையும் பயனுள்ளவை.  விக்கிரகங்களும் மறைமுகமாக பயனளிப்பவையே. அது போலவே சடங்குகள், உருவங்கள் எல்லாமே பயனளிப்பவைதாம். வேண்டியதெல்லாம் உள்ளத் தூய்மை மட்டுமே.  உள்ளம் தூய்மையாகவும், உண்மையாகவும் இருந்தால்தான் வழிபாடு பயனுள்ளதாகி லட்சியத்தை நோக்கி அழைத்துச் செல்லும். இந்த எல்லா வகையான வழிபாட்டு முறைகளும் தேவைதான் . இல்லை என்றால் அவை ஏன் இருக்க வேண்டும்? 

                    சுவாமி விவேகானந்தர்  ஸ்ரீகிருஷ்ணர் குறித்து  தம் சொற்பொழிவில் கூறியவை இவை. ஸ்ரீகிருஷ்ணர் குறித்து குறைகூறுவோருக்காக அவரின் பொன்மொழிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக