பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 5 மே, 2017

சீவலப்பேரி சிறப்பு

திருநெல்வேலியிலிருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது சீவலப்பேரி கிராமம். பாண்டி நாட்டில் சுடலைமாடனுக்கு பல கோயில்கள்  இருந்தாலும் குறிப்பிடும் படியாக ஒரு சில கோயில்களே திகழ்கின்றன. அவற்றில் முக்கியத்துவம் வாய்ந்தது இக்கோயில். மன்னன் ஸ்ரீ வல்லப  பாண்டியன் மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரி அமைத்தான். அந்த ஏரி, ஸ்ரீ வல்லப பேரி என்று அழைக்கப்பட்டது. அது மருவி ஸ்ரீவலபேரி யாகி,  சீவலப்பேரி ஆனது. இங்கு 650 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த மாசானக்கோனார் தன்னுடைய தந்தையின் கட்டளையை ஏற்று ஆடு மேய்க்க  சென்றார். சீவலப்பேரி ஊருக்கு மேற்கு மூன்று ஆறுகள் ஒன்றாய் கலக்கும் பகுதியான முக்கூடல் என்னும் இடத்தில் ஆடுகளை மேய்த்து  கொண்டிருந்தார். 12 வயதே ஆன பாலகன் மாசானம். நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளை அடிக்காமலும், அதட்டாமலும் உரிமையுடன் அழைத்தும்,  அவற்றுடன் கொஞ்சியும் அவன் பழகுவதை கண்ட ஒரு சாமியார், அவனிடம் சென்று ‘‘குழந்தாய், எனக்குப் பசியாக இருக்கிறது.

உண்பதற்கு உன்னிடம் ஏதாவது இருந்தால் கொடு,’’ என்று கேட்டார். காவி உடையும், காலில் ஆணிகள் பொருத்தப்பட்ட செருப்பும், கையில்  திருவோடும் கொண்டு, அகன்ற கம்பீரமான உடல்வாகும் கொண்டு நரைத்த தாடியுடன் நின்றிருந்த அந்த சாமியாரிடம், ‘‘சாமி, உங்களுக்கு கொடுக்க  ஒண்ணுமில்லே, நான் வூட்ல யிருந்து கொண்டாந்த கஞ்சிய இப்பதேன் குடிச்சு முடிச்சேன்,’’ என்றான். ‘‘பரவாயில்லை, ஏதாவது ஒரு ஆட்டிடம்  இருந்து பாலை கறந்து கொடு, நான் குடித்து பசியாறிக் கொள்கிறேன்.’’ ‘‘சாமி, முக்காசி ஆடு சினை ஆடுதேன். ஈத்தளஞ்ச ஆடுகள்கிட்டயும் இப்ப எப்படி பால கறக்க?’’ உடனே அருகே நின்ற ஆட்டை காட்டி, ‘‘இந்த ஆட்டில் இருந்து பாலை கறந்து கொடு,’’ என்றார் சாமியார். மாசானம் சத்தமாக சிரித்தார்.  ‘‘சாமி அது மலட்டு ஆடு, அதுல போய் எப்படி சாமி பால கறக்கிறது!’’ ‘‘குழந்தாய், நான் சொல்வதைக் கேள், அந்த ஆடு பால் தரும்.

இந்தா, இந்த திருவோட்டில் பாலை கறந்து கொடு’’ என்று சொல்ல, அதைத் தயக்கத்துடன் வாங்கினான் மாசானம். அந்த மலட்டு ஆட்டின் மடியைத்  தொட்டவுடனேயே பால் வந்து, திருவோடு நிரம்பியது! வியந்தார் மாசானம். சாமியாரை வியப்போடு பார்த்தபடியே எழுந்தார். திருவோட்டை வாங்கி  பாலை அருந்திய சாமியார், தனது சுயரூபத்தை காட்டினார் - வந்திருந்தது சுடலைமாடன்! கம்பீரமான தோற்றம், கனிவான சிரிப்பு ‘‘மாசானம், உன்  இடம் தேடி வந்த எனக்குக் கோயில் எழுப்பி, பூஜித்து வா,’’ என்றார் சுடலைமாடன். ‘‘ஐயா, நான் சிறியவன் என்னால் என்ன செய்ய முடியும்?’’ ‘‘உன்னோடு நானிருக்கிறேன், உன்னால் முடியும்.’’ ‘‘ அப்படியே செய்கிறேன். எனது தலைமுறைக்கும் காத்து நிக்கணும், நோய் வராம  பாதுகாக்கணும்,’’ (இந்த வேண்டுகோள் ‘பிறக்கும் பிள்ளைக்கும்…’ என்ற பாடலாய் பாடி கேட்டதாக கூறப்படுகிறது.) உடனே சுடலைமாடன் ‘‘எனக்கு  கோயில் கட்டி, பூஜித்து வா.

உன் தலைமுறையை காத்து நிற்பேன், குலம் சிறக்க வைப்பேன், ஊர் மக்களை காப்பேன், நோய், நொடி அண்டாமல் பார்ப்பேன். என்னை நம்பி, உன்னை தேடி வருவோருக்கு எப்பிணியாகினும் அப்பொழுதே நீக்கி வைப்பேன்,’’ என்று வாக்குறுதி கொடுத்த சுடலைமாடன் தான் நின்றிருந்த இடத்தில் கீழேயிருந்து மண்ணில் தன் விரலைத் தொட்டு, அதனால் மாசானத்தின் நாவில் ஓம் என்று எழுதினார். மாலைப்பொழுதானது. ஆடுகளை  கிடையில் அடைத்துவிட்டு தனது உறவினர் மற்றும் ஊராரிடம் நடந்ததை கூறினார் மாசானம். எல்லோரும் கேலி பேசினர். இவரது பேச்சை  பொருட்டாக நினைக்கவில்லை. சுடலைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்று வேதனைப்பட்ட மாசானம், அங்கிருந்து புறப்பட்டு  கால்போன போக்கில் பயணித்தார். சதுரகிரிமலை சென்றார்.

அங்கிருந்த சித்தர்களில் ஒருவரை குருவாகக்கொண்டு அவருக்கு தொண்டுகள் செய்து வந்தார். சித்தரைக் காணவரும் அன்பர்கள் அவரை குரு என்றும், மாசானத்தை பாலகுரு என்றும் அழைத்தனர். சித்தரை நாடி வரும் அன்பர்கள் தங்கள் இன்னல்களை எடுத்துக்கூறும் போது, அவர் சிறிதுநேரம் மௌனமாக இருந்து, பிறகு பதில் கூறுவார். ஆனால், சுடலையின் அருளால் மாசானக்கோனார் சித்தரை முந்திக்கொண்டு பதில் கூறிவிடுவார்.  இதனால் இவரை அங்கிருந்த பிற சித்தர்கள் ‘தலை இருக்க வால் ஆடலாமா’ என்று கேட்டு கண்டித்தனர். இதனால் மாசானத்தின் பெயர்  வாலகுருவாக மாறியது! 21 வயதை எட்டிய வாலகுரு காசிக்கு பயணம் மேற்கொண்டார். அடுத்த வருடம், சொந்த ஊரான சீவலப்பேரிக்கு வந்தார். சுடலை தரை மண் எடுத்து மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் என்று எழுதிய இடத்தின் மேற்கு பக்கம், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சுடலைமாடன் சுயம்புவாக தோன்றியிருந்தார். அந்த இடத்தில் அவருக்கு வாலகுரு கோயில் கட்டினார்.

அவர் நீண்ட சடைமுடி, காவி ஆடையுடன் இருந்ததால் அவ்வூர் மக்கள் இவரை வாலகுரு சன்னியாசிக் கோனார் என்று அழைத்தனர். சன்னியாசி கோனாருக்கு ஊருக்குள்ள கோயில் கட்டப்பட்டுள்ளது. அது அவர் வாழ்ந்த வீடு என்று கூறப்படுகிறது. இது போத்தி கோயில் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தை மாதம் சிறப்பு வழிபாடு நடக்கிறது. சுடலைகோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் முதல் நாள் கொடை விழா நடக்கிறது. பங்குனி கடைசி நாளன்று போத்தி கோயிலில் பூஜை செய்து, அங்கிருந்து அவரை கோயிலுக்கு அழைத்து வருவதாக இந்த நிகழ்ச்சி  அமைகிறது. சுடலைமாடன் மாசானக்கோனாருக்கு நாவில் ஓம் எழுத மண் எடுத்த இடம் மயான பூமியானது. அங்கிருந்துதான் மண் எடுத்து வந்து  கோயிலில் திருநீறாக கொடுக்கப்படுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை டிராக்டர் கொண்டு மயானகரையில் தோண்டி திருநீறு மண் அள்ளப்படுகிறது.

சுமார் 600 ஆண்டுகளாக மண் அள்ளப்பட்டும் அங்கு எந்த பள்ளமும் இன்னும் ஏற்படவில்லை, மண்ணெடுக்க தோண்டிய சில நாட்களிலேயே அந்த இடம் இயல்பாக சமமாகிவிடுகிறது. எல்லாம் சுடலையின் அற்புதம் என்கிறார்கள் சீவலப்பேரி மக்கள். இந்த திருநீறு மண்ணை பூசினால், தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்கிறார்கள் பலன்பெற்றவர்கள். இந்த கோயிலில் மூலவர் சுடலைமாடனின் வலது புறத்தில் தாய் பேச்சியம்மனும், தாய்  பிரம்மசக்தியும் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கின்றனர். அவருக்கு எதிரே புதியசாமியும், பின்புறம் முண்டன் சாமியும் அருள்பாலிக்கின்றனர். பனைமரங்கள் வளர்ந்திருக்கும் அடர் சோலை, தாமிரபரணி பாய்ந்தோடும் ஆற்றங்கரை, அமைதி தழுவும் அற்புத சூழல் யாவும் ஒரு சேர கொண்ட  தலத்தில் காவல் தெய்வமாய் வீச்சருவா கரத்தோடும், முறுக்கு மீசை முகத்தோடும் காத்து நிற்கிறார் சுடலைமாடன்...

இங்கிருந்து பல ஊர்களுக்கு பிடி மண் மூலமாக சென்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக